புதன், 24 ஜூலை, 2013

பேதைகளே!

பேதைகளே!


பெறலருந் தாயைத் தமிழை மறந்தீர்! பெயரிழந்தீர்!
விறல்வர லாறு விடுதலை யற்றீர்! வீழ்ந்திழிவீர்!
திறலறத் தாழ்ந்தே திருத்தமிழ் மீளாத் திரிதலுறப்
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!

அறங்கூ றருந்தமிழ் ஆன்ற முதன்மொழி யாமதனை
உறங்கி அழிப்பீர்! உயர்தனிச் செம்மை உலகறிந்தும்
இறப்புற விட்டீர்! இளையவர் கற்க இசைவளியீர்!
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!                                                (தெளிதமிழ்(17-7-2013) - புதுவையிலிருந்து வரும் திங்கள் இதழில் வெளிவந்தவை.)  

திங்கள், 22 ஜூலை, 2013

இழிகின்றார்!

இழிகின்றார்!                                                                                                                                       மூத்த தமிழே முதற்றாய் மொழியாம் முடிவைச் சொல்கின்றார்!                                                                                                                                 ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்எவர்க்கும் முதலென்றார்!                                                                                                                                           காத்தல் பேணல் கருதாத் தமிழர்கடைகெட் டழிகின்றார்!                                                                                                                                             ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால் உலகில் இழிகின்றார்!

கொல்களமாம் கூடங் குளம்.!

கொல்களமாம் கூடங் குளம!


தீங்கைத் தெளிவாய்த் தெரிந்துபிற மாநிலத்தார்
ஆங்கமைக்க ஒப்பார் அணுவுலையை – ஈங்கமைத்தீர்
சொல்லொணா இன்னலெலாம் சூழ்கேட்டில் எம்மக்கள்
கொல்களமாம் கூடங் குளம்.

எந்தமிழ் மறமே!

எந்தமிழ் மறமே!


ஈழவான் முழுதும் இருந்தெமை நோக்கும்
ஈடிலாத் தலைவ!எம் தம்பி!
காழகங் கொண்டே கடுவினை ஏற்ற
காளையே! சூளென உரைப்போம்!
ஊழலர் கேழல் உலுத்தரை ஒதுக்கி
உறுதியாய் விடுதலை மீட்போம்!
சூழலைச் சமைப்போம்! சூழ்பகை சாய்ப்போம்!
சொந்தமே! எந்தமிழ் மறமே!

புதன், 24 ஏப்ரல், 2013

சங்கப் பனுவல் படி!

சங்கப் பனுவல் படி!

விழுப்புரம் சங்க இலக்கியப் பொதும்பர் என்ற அமைப்பு, சங்கப் பனுவல் படி என்ற ஈற்றடி அமைத்து வெண்பா எழுதித்தருமாறு கேட்டபோது எழுதித்தந்த வெண்பாவை அனைவருடைய பார்வைக்குமாகக் கீழே தருகிறேன்:

இங்கிவ் வுலகில்நீ யாரென் றறிந்துணர
மங்காப் புகழ்ப்பண்பின் மாண்பறிய கங்குலாய்த்
தங்கியுள இற்றையிழி தாழ்வகற்ற எந்தமிழா
சங்கப் பனுவல் படி.  

----------------------------------------------------

திங்கள், 22 ஏப்ரல், 2013

வெற்றுக் கூச்சல்!

வெற்றுக் கூச்சல்!


வெற்றுரைகள் முழக்கங்கள் வீறார்ப்பு அறைகூவல்
வேலை இல்லா

எற்றுக்கும் உதவாத எடுபிடிகள் போற்றுரைகள்
எள்ளல் கூச்சல்!

பற்றெல்லாம் பெறவிருக்கும் பணங்காசில்! மேடைதொறும்
பார்க்கும் இந்தச்

சொற்றெரியாப் பதர்மாந்தர் சூளுரைகள் பேரொலிகள்
சொல்லப் போமோ?



-----------------------------------------------------

ஞாயிறு, 31 மார்ச், 2013

கொடுங்கூளி!



மகடூஉ முன்னிலை அமைந்த வெண்பா!

புதுவையினின்றும் வரும் திங்களிதழ் தெளிதமிழ் மகடூஉ முன்னிலை அமந்த வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் இயற்றி விடுக்கக் கேட்டிருந்தது. அவ்வாறே எழுதி விடுத்த வெண்பா இது:

எந்தமிழர் ஒன்றரையி லக்கத்தர் கொன்றழிக்க
அந்தஇழி பக்சேஉன் அம்பானான்! தந்திரமாய்க்
குந்தியுள குக்கல் குறளி கொடுங்கூளி!
தந்திடுவார் தக்கதொரு தீர்ப்பு.